பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
- ராஜபாளையம் அருகே பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
- இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜ குல ராமன் கண்மாயில் போர்வெல் அமைத்து கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் ஒருவர் போர்வெல் அமைத்து குடிநீர் எடுப்பதால் கீழ ராஜகுல ராமன் கிராம மக்களுக்கு சரியாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் இன்று காலை கீழராஜகுலராமன் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீரை அனுமதியின்றி எடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாசில்தாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தாசில்தார் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் சப்ளை சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.