உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: பரிசல் இயக்க, குளிக்க 3-வது நாளாக தடை

Published On 2024-10-15 05:10 GMT   |   Update On 2024-10-15 05:10 GMT
  • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்னாகரம்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று மாலை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து சரிய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடிதண்ணீர் குறைந்து வந்தது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News