உள்ளூர் செய்திகள் (District)

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் பாதையில் உருவான நீர்வீழ்ச்சிகள்

Published On 2024-10-16 06:03 GMT   |   Update On 2024-10-16 06:03 GMT
  • மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து.
  • 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

மேட்டுப்பாளையம்:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறை, மண் ஆகியவை விழுந்து தண்டவாளங்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று குன்னூர் இடையே உள்ள மரப்பாலம், பர்லியாறு, கே.என்.ஆர், ஹில்குரோவ், அடர்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மலைரெயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

அதில் இருந்து தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல தண்டவாளத்தில் விழுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேட்டுப்பாளையம் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளனவா என ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது தான் இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி இருந்ததை கண்டனர். மேலும் சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைரெயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்-பர்லியாறு இடையே முதல் கொண்டை ஊசி வளைவின் அருகே பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே முறிந்து விழுந்தது.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்களும், குன்னூரில் இருந்து வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினர்.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் வண்டிச்சோலை, பெள்ளட்டி மட்டம், பாய்ஸ் கம்பெனி, வண்டிச்சோலை, மூன்று ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் மற்றும் தாசில்தார் கனி சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் மரங்கள் அகற்றப்பட்டது.

இன்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள பிளாக்பிரிட்ஜ்-சப்ளை டிப்போ சாலையில் 3 மரங்கள் அடுத்தடுத்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால்

மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News