தஞ்சையில், 3 பேரிடம் ரூ.1.10 லட்சம் திருடிய பெண் கைது
- சி.சி.டி.வி. கேமராவில் அபிராமி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
- பாபநாசம் மேலவழுதூரை சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தையும் அபிராமி திருடினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேலத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து . இவரது மனைவி அபிராமி (வயது 34).
இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்கு உள்ளது.
மேலும் இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் தஞ்சை கீழவண்டிக்கார தெருவை சேர்ந்த வீரமணி என்பவரிடம் அவரது கவனத்தை திசை திருப்பி ரூ.35 ஆயிரத்தை திருடி கொண்டு அபிராமி தப்பினார்.
இதேப்போல் ரெட்டிபாளையத்தை சேர்ந்த கவிதாவிடம் ரூ.25 ஆயிரம், பாபநாசம் மேலவழுதூரை சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தையும் அபிராமி திருடினார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சி.சி.டி.வி. கேமராவில் அபிராமி சுற்றி திரியும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அபிராமியை பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.