கோத்தகிரியில் பெண் மின்னல் தாக்கி பலி
- போலீசார் இன்பமலரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
- கோத்தகிரி தாசில்தாரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அரவேனு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது கெரடாமட்ட தேயிலைத் தோட்டத்தில் இன்பமலர் (வயது 44) என்பவர் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென இடி- மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இன்பமலர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடன் வேலை செய்த தொழிலாளிகள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோத்தகிரி வட்டாட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இன்பமலரின் கணவர் மூர்த்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். எஸ் கைகாட்டி ஓம்நகரில் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த இன்பமலர் இடி மின்னல் தாக்கி பலியான சம்பவம், சக பெண் தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.