இந்தியா (National)

மீண்டும் மீண்டும் மிரட்டலால் அதிர்ச்சி- இன்று 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-19 05:36 GMT   |   Update On 2024-10-19 05:36 GMT
  • இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானங்களில் சோதனை நடத்தப்பட்டபோது அவை புரளி என்பது தெரியவந்தது.

இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற மிரட்டல்களை தடுப்பதற்காக கடும் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகும் குற்றவாளிகளை விமானத்தில் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மேலும் 2 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு நேற்றிரவு விஸ்தாரா விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.

இதனால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை நள்ளிரவு 12.40 மணி அளவில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரை இறக்க முடிவு செய்தனர்.

அதன்படி பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விமானம் 2½ மணி நேரம் தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.

துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து வந்த போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர். தொடர்ந்து பயணிகளின் உடமைகள் மற்றும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.

இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன் பிறகே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த மிரட்டல் சம்பவத்தால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News