செய்திகள்

டெல்லி: பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து - 37 மாணவர்கள் உயிர் தப்பினர்

Published On 2017-10-31 18:09 GMT   |   Update On 2017-10-31 18:10 GMT
டெல்லியில் உள்ள பள்ளி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த 37 மாணவர்கள் உயிர் தப்பினர்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பள்ளி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த 37 மாணவர்கள் உயிர் தப்பினர்.

டெல்லியின் நரைனா பகுதியில் கேந்திரியா வித்யாலயா பள்ளி உள்ளது. இன்று காலை இந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 37 மாணவர்கள் இருந்தனர்.

தவுலா கான் என்ற இடத்தில் உள்ள சுற்றுவட்ட சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. புகை வருவதை கண்டறிந்த டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினர்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று பேருந்தில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். அதன்பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் மூன்று வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News