தெருநாய் ஓயாது குரைப்பதால் ஆஸ்பத்திரியில் தூங்க முடியவில்லை - லாலுபிரசாத் கவலை
ராஞ்சி:
கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் ஜெயில் தண்டனை பெற்றுள்ள ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஜார்கண்ட் மாநிலம் ராய்பூர் ஜெயிலில அடைக்கப்பட்டார்.
அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வார்டு அருகே இரவு நேரங்களில் தெருநாய்கள் ஓயாமல் குரைத்து கொண்டு இருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று லாலுபிரசாத் கூறி இருக்கிறார். எனவே,வேறு வார்டு ஒதுக்கி தரும்படி அவர் கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக லல்லு பிரசாத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான போலா யாதவ் கூறியதாவது:-
லாலுபிரசாத் சிகிச்சை பெறும் வார்டு அருகே தெரு நாய் குரைப்பதால் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
எனவே, கட்டண சிகிச்சை அளிக்கும் தனி வார்டுக்கு அவரை மாற்றும்படி கேட்டு இருக்கிறோம். இதற்காக கட்டணத்தை நாங்கள் செலுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.
மேலும் அவர் தற்போது தங்கி உள்ள அறையில் கழிவறை மிக மோசமாக உள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஸ்ரீவஸ்வதா கூறும்போது, லாலுபிரசாத்திடம் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் கடிதம் வந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயில் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.
அவர்கள் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என்று கூறினார். #LaluPrasadYadav