செய்திகள்

குஜராத்தில் இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் - வெளிமாநிலத்தினர் 20 ஆயிரம் வெளியேறினர்

Published On 2018-10-08 11:43 GMT   |   Update On 2018-10-08 12:28 GMT
குஜராத்தில் 14 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்தி பேசும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பயந்து வெளிமாநிலத்தினர் சுமார் 20 ஆயிரம் வெளியேறியுள்ளனர். #GujaratCMRupani
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.



இதற்கிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.

ஏதாவது பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வெளிமாநிலத்தவர்கள் போலீசில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என ராஜ்கோட் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி தெரிவித்துள்ளார். #GujaratCMRupani #20000migrants #20000migrantsfledGujarat
Tags:    

Similar News