இந்தியா
சந்திரசேகர ராவ்

கழுதையை திருடியதாக மாணவர் தலைவர் கைது - சந்திரசேகர ராவை அவமதித்ததால் போலீஸ் நடவடிக்கை

Published On 2022-02-19 06:16 GMT   |   Update On 2022-02-19 07:27 GMT
தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திர சேகரராவை அவமதித்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதே நேரத்தில் அந்த கழுதையை தான் திருடவில்லை என்றும் வாடகைக்கு எடுத்ததாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் பால்மூரி வெங்கட் நரசிங்கராவ்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஹூசூர்பாத் சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் நடந்துகொண்டார்.

கழுதை ஒன்றை திருடி அதன்மேல் கேக்கை வைத்து முதல்-மந்திரியை அவமானப்படுத்தி அவரும், என்.எஸ்.யு.ஐ. உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கழுதையின் மீது சந்திரசேகரராவ் போஸ்டரையும் ஒட்டி இருந்தனர். அந்த கழுதையை வைத்து கேக் சாப்பிட வைத்தும் சந்திரசேகர ராவை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனர். கழுதையுடன் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வெளியானது.



இதைத் தொடர்ந்து மாணவர் அமைப்பு தலைவர் நரசிங்கராவை போலீசார் கைது செய்தனர். கரீம் நகரில் வைத்து ஜம்மிகுண்டா போலீசார் அவரை பிடித்தனர். கழுதையை திருடியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முதல்-மந்திரி சந்திர சேகர ராவை அவமதித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் அந்த கழுதையை தான் திருடவில்லை என்றும் வாடகைக்கு எடுத்ததாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பால்மூரி வெங்கட் நரசிங்க ராவ் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நரசிங்கராவ் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். கழுதையை திருடியதற்காக கைது செய்யப்பட்டது கண்டத்துக்குரியது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News