இந்தியா

ஒலிம்பிக்சில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் கடவுள் கொடுத்த தண்டனை - பிரிஜ் பூஷன் சிங் சாடல்

Published On 2024-09-07 10:35 GMT   |   Update On 2024-09-07 10:35 GMT
  • 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது அரசியல் சதி
  • பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்பிய வினேஷ் போகத் சக வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரசில் இணைந்துள்ளார். எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் வினேஷ் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கிய போதே இது முழுக்க முழுக்க அரசியல் சதி என்றும் காங்கிரசால் இயக்கப்படும் போராட்டம் என்றும் நான் கூறி வந்தேன்.குறிப்பாக இதில் [அரியானா முன்னாள் முதல்வர்] பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா,ராகுல் மற்றும் பிரியங்காவின் சதி.

பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர். தற்போது அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் இது தெளிவாகியுள்ளது. அரியானாவின் புதல்விகளுக்கு அவர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.அவர்கள் அரியானாவில் எந்த தொகுதியில் நின்றாலும், ஒரு சிறு பாஜக வேட்பாளரே அங்கு வெல்ல போகிறார்.

ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்.எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News