இந்தியா

பிரதமர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

Published On 2024-07-21 05:07 GMT   |   Update On 2024-07-21 05:07 GMT
  • பிரதமர் மோடியின் இல்லத்தில் 2 ஆண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், படன் செருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது மனைவி லஷ்மி தேவி. இவர்களுக்கு சாய், சாய் பல்லவி என ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர்.

வெங்கடேஷ்வரலு மத்திய பாதுகாப்பு படையில் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்தார்.

பிரதமர் மோடியின் இல்லத்தில் 2 ஆண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பணி மாறுதலில் படன் செருவு அடுத்த பி.டி.எஸ். போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதலில் வந்தார். பானூர் டவுன்ஷிப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து பஸ்சில் வேலைக்கு வந்தார். போலீஸ் நிலையம் அருகே பஸ் நின்றபோது அதிலிருந்து வெங்கடேஸ்வரலு கீழே இறங்கினார்.

அப்போது அவரது தோள்பட்டையில் மாட்டி இருந்த துப்பாக்கி விசையில் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ்வரலுவின் கைப்பட்டது.

இதில் துப்பாக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்து வெங்கடேஸ்வரலுவின் கழுத்தில் புகுந்த குண்டு தலைவழியாக வெளியே வந்து பஸ்சின் மேற்கூரையை பிய்த்துக் கொண்டு சென்றது.

இதில் வெங்கடேஸ்வரலு தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தை கேட்ட பயணிகள் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஸ்வரலுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News