இந்தியா

அசாமில் கடும் அமளிக்கிடையே முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப்பதிவு சட்ட மசோதா தாக்கல்

Published On 2024-08-28 03:57 GMT   |   Update On 2024-08-28 03:57 GMT
  • முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் சட்ட மசோதா தாக்கல்.
  • சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும்- அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா.

அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்ட மசோதாவை ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் அமளியில் ஈடுபட்டது.

இருந்தபோதிலும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மதக்குருக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள்தான் திருமணத்திற்கு சாட்சி.

இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டால் இனிமேல் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள பெண், 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதன்மூலம் சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்டத்தை நாட்டின் முதல் மாநிலமாக கொண்டு வந்தது. தற்போது அசாம் அதே வகையிலான சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

திருமணம் தொடர்பான இதற்கு முந்தைய சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த புதிய சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில், தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுப்படுத்துவதற்கான இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தன்னுடைய அரசு திருமணங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வரும் என ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால், ஆறு மாதத்திற்கு முன்பே அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதில் கலப்பு திருமணங்களும் அடங்கும்.

Tags:    

Similar News