இந்தியா (National)

சித்தராமையா நில வழக்கு: மூடா தலைவர் திடீர் பதவி விலகல்

Published On 2024-10-16 09:53 GMT   |   Update On 2024-10-16 09:53 GMT
  • சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு.
  • லோக்ஆயுக்தாவின் மைசூரு கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

லோக்ஆயுக்தா அமைப்பின் மைசூரி கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளை அழித்ததாக அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

1983-ல் இருந்து மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர். மைசூரு தாலுகா பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். 2000-த்தில் டவுண் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தார். அதன்பின் 8 வருடம் கழித்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

மைசூரு நகர்ப்புற திட்டத்திற்கான ஒரு இடத்தை கொடுத்ததற்கான மதிப்புமிக்க இடத்தில் 14 மனைகள் சித்தராமையா மனைவி பி.என். பார்வதி பெயருக்கு ஒதுக்கபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் மாநில அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மனைகள் தனது மனைவியின் சகோதரர் பரிசாக கொடுத்தது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சித்தராமையா மனைவி 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பும் அதை திரும்பி வாங்க ஒப்புக் கொண்டது.

Tags:    

Similar News