இந்தியா

ஆந்திராவில் ஆட்சி மாற்றம்- தெலுங்கு தேசம் முன்னிலை

Published On 2024-06-04 06:46 GMT   |   Update On 2024-06-04 06:46 GMT
  • பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் என நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது.
  • மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் என நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன.

அந்த வகையில், நாடு முழுக்க 542 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களின் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 127 இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 21 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜனசேனா கட்சி 20 இடங்களை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களை பெற்றுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியினர், தொண்டர்கள் அலுவலகத்திற்கு வெளியே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News