இந்தியா

அண்ணாமலை டெல்லி பயணம்: மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் மீனவர் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

Published On 2024-08-05 06:21 GMT   |   Update On 2024-08-05 06:21 GMT
  • மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
  • சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும்.

சென்னை:

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்றாலும் உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலியானார்.

இப்போதும் தமிழக மீனவர்கள் 70 பேர் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் பறிமுதல் செய்த 170 படகுகளையும் இதுவரை திருப்பி தரவில்லை.

எனவே சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் 170 படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று மீனவர்கள் வலி யுறுத்தி வருகிறார்கள்.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர் பிரிவு தலைவர் நீலாங்கரை முனுசாமி மற்றும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி சென்றனர்.

இன்று மாலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார்கள்.

அப்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகள் பற்றியும் மந்திரியிடம் வலியுறுத்துகிறார்கள்.

Tags:    

Similar News