இந்தியா (National)

பா.ஜனதா உள்கட்சி தேர்தல்- டெல்லியில் இன்று தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

Published On 2024-10-21 13:34 GMT   |   Update On 2024-10-21 13:34 GMT
  • தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள்.
  • டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பணியை தொடங்கினார்கள்.

ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினராக சேரலாம். வீடு தேடி வரும் நிர்வாகிகள் முன்னிலையில் மிஸ்டு கால் கொடுத்தும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள முடியும்.

மிஸ்டுகால் கொடுத்ததும் டெல்லி தலைமையில் இருந்து ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்படி உறுப்பினராக சேருபவரின் பெயர், முகவரி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், தொகுதி, பூத் எண், எந்த வகுப்பை சேர்ந்தவர் என்ற பல விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் எந்த விபரம் விடுபட்டாலும் கம்ப்யூட்டரில் பதிவாகாது.

இப்படிப்பட்ட சிரமங்கள் இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே நடக்கிறது. இதுவரை 30 லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள்.

இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். இப்போது ஆன்லைன் உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை விபரத்தையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையில் உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி தமிழக பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த கட்டமாக உள்கட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் கட்சி தேர்தல் தொடங்குகிறது. முதற்கட்டமாக கிளை, மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர்களாக மீனாட்சி, கதலி, ஜி.கே.செல்வகுமார் ஆகியோரை டெல்லி மேலிடம் நியமித்து உள்ளது.

இவர்கள் 4 பேரும் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மேலிட வழி கர்டுதல்படி கட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News