இந்தியா (National)

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கவும்... சரத் பவாருக்கு பட்நாவிஸ் வலியுறுத்தல்

Published On 2024-10-16 14:28 GMT   |   Update On 2024-10-16 14:28 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
  • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

Tags:    

Similar News