இந்தியா

ஸ்மிருதி இரானியை பழிக்குப்பழி வாங்கிய காங்கிரஸ்: 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2024-06-06 05:34 GMT   |   Update On 2024-06-06 05:34 GMT
  • அமேதி தொகுதியில் கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி.
  • காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது.

டெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போதைய மக்களவை தேர்தலை போன்று, கடந்தமுறை (2019) நடந்த தேர்தலிலும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

கடந்தமுறை அவர் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதிரானி தோற்கடித்தார்.

காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தி கடந்தமுறை தோல்வியை தழுவிய அமேதியில் போட்டியிடவில்லை.

அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் இந்த முறையும் பாரதிய ஜனதா கட்சி சாரபில் ஸ்மிருதி ரானியே போட்டியிட்டார்.

கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்த அவரை, இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் ஈடுபட்டனர்.

அதற்கு தகுந்தாற்போல் தேர்தல் பிரசாரத்துக்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினர். மேலும் சமாஜ்வாடி கட்சியினரும் பிரசாரத்தில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த முறை தேர்தலில் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி ரானியை, தற்போது தோற்கடித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது. இந்த வெற்றி அவர்களுக்கு இனிப்பான பழிவாங்கலாக இருக்கிறது. 

Tags:    

Similar News