டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்கும் தேதி.. வெளியான புது தகவல்..!
- டெல்லி கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
- ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.