வாக்காளர்களின் வீடுகளில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் வாக்குச்சாவடி இருப்பதை உறுதி செய்யுங்கள்- தேர்தல் கமிஷனர்
- அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.
ஞானேஷ்குமார், இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி, தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
மாநாட்டில் ஞானேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், வட்டாரநிலையிலான அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். அவ்வப்போது இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதில் அளிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டங்கள், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டும்.
ஒவ்வொரு தலைமை தேர்தல் அதிகாரியும் மார்ச் 31-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் கமிஷனருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியல் சட்டப்பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ மிரட்டப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளரின் வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் வாக்குச்சாவடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பதை எளிமைப்படுத்தவும், அதிகரிக்கவும் கிராமப்புற வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் கூட வாக்குச்சாவடிகள் நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.