இந்தியா

புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி: பாராட்டிய விமானப்படை

Published On 2024-06-23 11:22 GMT   |   Update On 2024-06-23 14:26 GMT
  • கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏவுதளத்தில் நடைபெற்ற புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றது.
  • புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டியது.

பெங்களூரு:

விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் ஆர்.எல்.வி. புஷ்பக் என்ற ஏவுகலனை இஸ்ரோ ஏற்கனவே 2 முறை சோதனை செய்திருந்தது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 7.10 மணிக்கு 3-வது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.

புஷ்பக் என பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்.எல்.வி. வாகனம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இதன்மூலம் செயற்கைக்கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ஏவுகலன் திட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்துகாட்டி உள்ளோம் என இஸ்ரோ தெரிவித்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் என இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.

Tags:    

Similar News