இந்தியா

ஏர்இந்தியா ஊழியர் கொலையில் டெல்லி பெண் தாதா அதிரடி கைது

Published On 2024-09-20 07:49 GMT   |   Update On 2024-09-20 07:49 GMT
  • கபில்மான் தனது காதலியான காஜல்காத்ரி என்பவர் மூலம் இந்த கொலையை நிகழ்த்தியதும் தெரியவந்தது.
  • டெல்லி குற்றப்பிரிவு சிறப்புக்குழுவினர் காஜல்காத்ரியை கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி:

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா ஊழியரான சுரஜ்மான் (வயது 30). என்பவர் ஒரு கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

நொய்டாவில் உள்ள ஜிம்மில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக்கொலை செய்தது. போலீஸ் விசாரணையில் சுரஜ்மான் மீது எந்த குற்றவழக்குகளும் நிலுவையில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

அப்போது சுரஜ்மானின் சகோதரர் பர்வேஷ்மான் ஒரு வழக்கில் கைதாகி மண்டோலி ஜெயிலில் இருப்பதும், அவருக்கு சுரஜ்மான் அடிக்கடி பண உதவி செய்து வருவதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பர்வேஷ்மான் ஏற்கனவே டெல்லியை சேர்ந்த கபில்மான் என்பவரின் தந்தையை கொலை செய்ததும், அதற்கு பழி வாங்குவதற்காக கபில்மான் தனது காதலியான காஜல்காத்ரி என்பவர் மூலம் இந்த கொலையை நிகழ்த்தியதும் தெரியவந்தது.

அதாவது கபில்மான் ஏற்கனவே ஒரு வழக்கில் ஜெயிலில் அடைக்கபட்டுள்ளார். அவரை சந்திப்பதற்காக காஜல்காத்ரி சென்ற போது அவர் பர்வேஷ்மானை பழி வாங்குவதற்காக அவரது சகோதரரான சுரஜ்மானை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்0. மேலும் இந்த கொலை திட்டத்திற்காக காஜல்காத்ரி ரூ.4 லட்சம் பேசி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1½ லட்சத்தை பெற்றதும் தெரியவந்தது.

காஜல்காத்ரி கடந்த 2019-ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றபோதுதான் கபில்மானை சந்தித்துள்ளார். ரவுடியாக திகழ்ந்த கபில்மானுடனான பழக்கத்திற்கு பிறகு காஜல்காத்ரியும், குற்றச்சம்பவங்ளில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கபில்மான் சிறைக்கு சென்ற நிலையில் காஜல்காத்ரி பெண் தாதாவாக உருவெடுத்துள்ளார்.

இந்தநிலையில் தான் இந்த கொலை வழக்கில் காஜல்காத்ரியை தீவிரமாக தேடி வந்தனர். அவரை பற்றி துப்புக்கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். இந்தநிலையில் டெல்லி குற்றப்பிரிவு சிறப்புக்குழுவினர் காஜல்காத்ரியை கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News