இந்தியா

கங்கனாவை அறைந்த விவகாரம்.. பெண் காவலருக்கு அநீதி நடந்தால் போராட்டம் வெடிக்கும் - விவசாய சங்கங்கள்

Published On 2024-06-08 08:35 GMT   |   Update On 2024-06-08 09:48 GMT
  • குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன
  • பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

 வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்ததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் நடிகை சாபனா அஸ்மி உள்ளிட்டோர் கங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

 

இந்த சம்பவத்துக்கு பிறகு கங்கனா வெளியிட்ட வீடியோவில் பஞ்சாபியர்கள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற தொனியில் பேசி மத நம்பிக்கைகளை புண் படுத்தியுள்ளதால் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

 

Tags:    

Similar News