இந்தியா

எஸ்.சி., எஸ்.டி பிரிவு இட ஒதுக்கீட்டில் 'கிரிமீலேயர்' கிடையாது - மத்திய அரசு உறுதி

Published On 2024-08-10 07:24 GMT   |   Update On 2024-08-10 07:24 GMT
  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
  • பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது

பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமி லேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவானது இறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில்,

அண்மையில் உச்சநீதிமன்றத்த்தில் தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் என்.டி.ஏ தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

அந்த வகையில், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் ஆனால் அந்த இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்று தெரிவித்தார்.

முன்னதாக பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அந்த தீர்ப்பில். சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுத்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News