இந்தியா

கனமழையால் தத்தளிக்கும் அசாம்: 6.71 லட்சம் பேர் பாதிப்பு

Published On 2024-07-02 10:17 GMT   |   Update On 2024-07-02 10:17 GMT
  • கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
  • பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.

இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் கனமழை பெய்யும் என பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

இந்த கனமழையால் 20 மாவட்டங்களில் 6.71 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்பர்காரின் சார் (சந்த்பார்) பகுதியில் சிக்கித் தவித்த 13 மீனவர்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். அசாம் மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று விமானப்படை மீட்பு பணியில் ஈடுபட்டது.

தேமாஜி மாவட்டத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கிய 7 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரையும், வருவாய்த்துறை அதிகாரி ஒருவரையும் இந்திய விமானப்படை மீட்டுள்ளது.

தற்போது கனமழையால் திப்ருகார் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுளளது. அசாமின் மேற்பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் கூட இந்த ஆறுநாள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிஸ்வானத், கசார், சராய்டியோ, தராங், சிராங், தெமாஜி, திப்ருகார், கோலாகத், ஜோர்ஹத், கம்ருப், லகிம்பூர், சிவசாகர், சோனிட்புர், மோரிகயோன், நயகோன், மஜுலி, கரிம்கஞ்ச், தமுல்புர், தின்சுகியா, நல்பாரி மாவட்டங்களில் 6,71,167 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மழை வெள்ளம், புயல், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். ஜொர்காத், சோனிட்புர், கம்ருப், துப்ரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

72 முகாம்களில் 8,142 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 54 இடங்களில் 614 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற கசிரங்கா தேசிய பூங்காவில் 233 வன முகாம்களில் 95 வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Tags:    

Similar News