இந்தியா (National)

கட்சியை மேலும் பலப்படுத்த திட்டம்: இந்த ஆண்டு இறுதியில் புதிய தலைவர் தேர்வு

Published On 2024-07-15 07:43 GMT   |   Update On 2024-07-15 07:43 GMT
  • புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்குகிறது.

புதுடெல்லி:

பா.ஜ.க. தேசிய தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். தற்போது அவர் எம்.பி.யாகி மத்திய மந்திரியாகவும் பதவியை பெற்றுள்ளார்.

அவருக்கு பதில் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் பா.ஜ.க. புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், ராதாமோகன் சிங், டாக்டர் சுதா யாதவ், வினோத் டவ்தே, சுனில் பன்சல், டாக்டர் கே.லட்சுமண் ஆகியோரது பெயர் பா.ஜ.க. தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு சற்று வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை தலைவர் பதவியில் அமர்த்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை இந்த இறுதிக்குள் செய்து முடிக்க வேண்டியது உள்ளது.

அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் பா.ஜ.க. கட்சிக்கு நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மிக தீவிரமாக உறுப்பினர்கள் சேர்க்கை பணி நடைபெறும்.

இதையடுத்து அக்டோபர் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு புதிய நிர்வாகிகள் தேர்தல் தொடங்கும்.

நவம்பர் மாதம் 10-ந் தேதி மண்டல அளவிலான தலைவர்கள் தேர்தல் தொடங்கும். நவம்பர் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு மாநில நிர்வாகிகள், மத்திய குழு உறுப்பி னர்கள் ஒருங்கிணைந்து தேசிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.

தேசிய தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி நடத்தி முடிக்கப்படும்.

Tags:    

Similar News