இந்தியா

ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 10 வரை போலீஸ் காவல் நீட்டிப்பு

Published On 2024-06-06 16:15 GMT   |   Update On 2024-06-06 16:15 GMT
  • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
  • சிறப்பு விசாரணைக்குழு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரேவண்ணாவின் போலீஸ் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News