இந்தியா

பள்ளி விடுமுறையா? இல்லையா? முகநூல் பக்கத்தில் கலெக்டரிடம் நேரடியாக கேட்ட மாணவர்கள்: சமூக வலைதளங்களில் வைரல்

Published On 2024-06-29 05:49 GMT   |   Update On 2024-06-29 05:49 GMT
  • பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்.
  • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

மழை காலத்தில் மாணவ-மாணவிகள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்து காலையிலும் அது தொடரும் என்ற பட்சத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும்.

காலநிலைக்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யும் போது விடுமுறை அறிவிப்பும் காலையில் தான் வெளியிடப்படும்.

விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மழை பெய்வதை பார்த்து இன்று பள்ளிக்கு விடுமுறையா? இல்லாயா? என்று கலெக்டரின் முகநூல் பக்கத்தில் மாணவ -மாணவிகள் நேரடியாக கேள்வி கேட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த வரும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமைக்கு தகுந்தவாறு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இன்றைக்கு பள்ளி விடுமுறையா? இல்லையா? என்று நேரடியாக கேள்வி கேட்டி ருக்கின்றனர். ஏராளமானோர் கலெக்டரிடம் அந்த கேள்வியை கேட்டனர்.

மாணவ-மாணவிகள் அந்த கேள்விக்கு கலெக்டரும் பதில் தெரிவித்து பதிவு வெளியிட்டார். அவரது பதிவில் "விடுமுறை இல்லையே, பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பள்ளி மாணவர்களின் கேள்விக்கு கலெக்டர் அளித்திருக்கும் பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கலெக்டரின் இந்த பதிவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் "லைக்" செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News