இந்தியா

நீட் தேர்வை பணக்கார மாணவர்களுக்கான தேர்வாக மத்திய அரசு மாற்றிவிட்டது- ராகுல் காந்தி

Published On 2024-07-01 10:18 GMT   |   Update On 2024-07-01 10:29 GMT
  • நீட் விவகாரத்தில் ஒரு நாள் விவாதம் நடைபெற வேண்டும்.
  • நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது.

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

அயோத்தியாவில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருக்கு எனது வாழ்த்து.

அயோத்தியா என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டு விட்டது.

ராமர் பிறந்த மண்ணிலேயே பாஜகவிற்கு செய்தி வழங்கப்பட்டுவிட்டது. அந்த செய்தி நமது கண்முன்னே அமர்ந்திருக்கிறது. அயோத்தியாவில் என்ன நடந்தது. எப்படி நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என தெரிந்து கொண்டேன்.

சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டேன்.

அயோத்தியாவில் சிறு வியாபாரிகளை தெருவோரத்தில் வீசிவிட்டனர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்து விட்டனர். வீடுகளை இடித்துவிட்டனர்.

ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டபோது அதில் அம்பானி, அதானி மட்டும்தான் இருந்தனர். ராமர் கோயில் திறப்பில் அயோத்தியாவை சேர்ந்த மக்கள் இல்லை. அது அந்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் அயோத்தி மக்கள் பாஜகவிற்கு சரியான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

அயோத்தி மக்கள் உங்களை தோற்கடித்துவிடுவார்கள் என்று முன்னரே பிரதமரிடம் ஆய்வாளர்கள் தெரிவித்துவிட்டனர்.

பிரதமர் அயோத்தி மக்களை மட்டும் அல்ல பாஜகவினரையே கூட அச்சமூட்டுகிறார்.

அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை ராணுவ வீரர்கள் என்று நாம் கூற முடியாத நிலை உள்ளது. பண மதிப்பிழப்பை எப்படி கொண்டு வந்தாரோ, அதேபோல தன்னிச்சையாக கொண்டு வந்த திட்டம் தான் அக்னிவீர்.

அக்னிவீர் திட்டம் பிளவை ஏற்படுது்தும் திட்டம், எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம்.

மணிப்பூரில் உள்நாட்டு போரை உருவாக்கி உள்ளீர்கள். ஆனால், இன்று வரை நாட்டின் பிரதமரான மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூர் இந்திய நாட்டின் ஒரு மாநிலம் இல்லையா ? நான் மணிப்பூருக்கு சென்று, குக்கி மற்றும் மைத்தேயி சமூகத்தினரை சந்தித்தேன்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சாலைகளில் திரண்டனர். போராடிய விவசாயிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவீர்கள்.

குறைந்தபட்ட ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், அதனை நீங்கள் இதுவரை வழங்கவில்லை.

நீட் என்பது தொழில் முறை தேர்வு அல்ல. வணிக ரீதியிலான தேர்வு. நீட் தேர்வு மாணவர்களுக்கான போட்டித்தேர்வாக இல்லை.

தொழில் முறை தேர்வுகளை எல்லாம் நீங்கள் வணிக முறை தேர்வுகளாக மாற்றிவிட்டீர்கள்.

நீட் தேர்வில் ஒரு மாணவர் டாப்பராக வர முடியும். ஆனால் அவரிடம் பைசா இல்லை என்றால் மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியாது.

நீட் பாஸ் மார்க் 10 சதவீதம் முதல் 25 சதவீதம். நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. நீட் உள்பட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் மத்திய மயமாக்கிவிட்டீர்கள்.

குடியரசுத் தலைவர் உரையில் நீட் தேர்வு குறித்தோ, அக்னிவீர் குறித்தோ, அக்னிவீர் குறித்தோ எதுவும் இடம்பெறவில்லை. நீட் விவகாரத்தில் ஒரு நாள் விவாதம் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News