இந்தியா

கேரளாவில் துரத்தும் நாயை விரட்ட தொழிற்கல்வி மாணவர்கள் கண்டுபிடித்த நவீன கருவி

Published On 2023-01-18 06:24 GMT   |   Update On 2023-01-18 06:51 GMT
  • நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர்.
  • நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பலரும் தெருநாய்களால் கடிக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.

இதுபோல அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன.

இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவன் ஆண்டோ ஜாய் மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர் தெருநாய்களை துரத்த என்ன செய்யலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இதன் பலனாக நாயை துரத்தும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதற்காக தங்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் துணையுடன் அவர்கள் 45 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர். இந்த கருவியில் இருந்து எழும் அல்ட்ரா சவுண்ட்டை கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர். இதனை பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். அதில் நல்ல பலன் கிடைத்தது.

இந்த கருவியை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புத்தக பையில் இணைத்து கொள்ளலாம். நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

இந்த கருவியை தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் வெளியிட மாணவர்கள் ஆண்டோ மற்றும் பிரார்த்தனா முடிவு செய்தனர். இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News