இந்தியா

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Published On 2025-03-23 07:28 IST   |   Update On 2025-03-23 07:28:00 IST
  • போலீசார் பறிமுதல் செய்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
  • இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

புதுடெல்லி:

டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.

அதன்படி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.

பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.

அதன்படி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

மேலும் தற்போதைய நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News