ஹிஜாப் விவகாரத்தில் சித்தராமையா திடீர் பல்டி
- பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன.
பெங்களூர்:
கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாள ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்னிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நான், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றேன். ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன. உடனடியாக தடை உத்தரவை நீக்க முடியாது. அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும். விரைவில் இதுபற்றி அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனிமனித உடை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்றும், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றும் நேற்று முன்தினம் சித்தராமையா பேசிய நிலையில் அரசு மட்டத்தில் ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என திடீர் பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.