இந்தியா (National)

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்களுக்கு எச்சரிக்கை

Published On 2024-09-29 04:57 GMT   |   Update On 2024-09-29 04:57 GMT
  • திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது.
  • நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதியில் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்றது.

இந்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது. கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டன.

நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதனால் பக்தர்கள் சிறுத்தை பயமின்றி நடைபாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்தது.

இதனைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர்.

அப்போது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்தியது. இதனால் சிறுத்தை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

மீண்டும் நடைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று 71,133 பேர் சாமி தரிசனம் செய்தனர். 35,502 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News