இந்தியா (National)

ரூ.99-க்கு மது விற்பனை 12-ந்தேதிக்கு ஒத்திவைப்பு- ஆந்திர மது பிரியர்கள் ஏமாற்றம்

Published On 2024-10-02 09:50 GMT   |   Update On 2024-10-02 09:50 GMT
  • ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது.
  • தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திராவில் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 736 சில்லறை மது விற்பனை கடைகள் உருவாக்கப்படுகிறது. இந்த கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது.

இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபானக கொள்கை திட்டத்தின்படி அரசுக்கு ரூ.5500 கோடி வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும். அதில் ரூ.99 மற்றும் அதற்கும் குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் 1-ந்தேதி முதல் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் கடைகள் ஒதுக்குவது குறித்த நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் வருகிற 12-ந்தேதி மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்பட்டு ரூ.99-க்கு கிக்கான மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்கத்துடன் காத்திருந்த மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இன்னும் 10 நாட்கள் குறைந்த விலை மதுவுக்கு காத்திருக்க வேண்டுமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News