இந்தியா (National)

'கூகுள் மேப்' வழியில் சென்றபோது விபத்து - 2 பேர் உயிரிழப்பு

Published On 2024-09-24 05:01 GMT   |   Update On 2024-09-24 05:01 GMT
  • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
  • விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ் ஜார்ஜ்(வயது48), சைலி ராஜேந்திர சர்ஜே(27). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்துக்கு வந்திருக்கின்றனர்.

அவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகோம் பகுதியில் இருந்து எர்ணாகுளத்துக்கு வாடகை காரில் சென்றனர். கைப்புழமுட்டு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இதனால் அவர்களது கார் தண்ணீரில் மூழ்கியபடி இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டுள்ளனர். அவர்களது சத்தத்தை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் ஆற்றுக்குள் கார் முழுவதுமாக மூழ்கியது. உள்ளூர் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி காருக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் 20 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த காரை மீட்டு வெளியே எடுத்தனர். காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்த ஜேம்ஸ் ஜார்ஜ், சைலி ராஜேந்திர சர்ஜே ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு கூகுள் மேப்பை பார்த்துபடி சென்றி ருக்கலாம் என்றும், அப்போது தவறான வழியை காட்டியதன் காரணமாக ஆற்றுக்குள் கார் விழுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேம்ஸ் ஜார்ஜ் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே விபத்தில் பலியான தகவல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News