பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த யோகேஸ்வரா: இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
- சன்னபட்னா தொகுதியை ஜேடிஎஸ்க்கு ஒதுக்கியதால் அதிருப்தி எனத் தகவல்.
- சட்மன்ற மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடக மாநில பா.ஜ.க.வின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் சி.பி. யோகேஷ்வரா. இவர் மேலவை உறுப்பினர் பதவியை கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தார்.
அதன்பின் இன்று பா.ஜ.க.-வின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த கையோடு கர்நாடக மாநில முதலவர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை சந்தித்தார்.
கர்நாடகாவில் சன்னபட்னா, சந்தூர் மற்றும் சிகாயோன் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சன்னபட்னா தொகுதியில் இருந்து தேர்வான ஹெச்.டி. குமாராசாமி மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால், இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ந்தேதி இடைதேர்தல் நடைபெற இருக்கிறது.
பா.ஜ.க. சன்னபட்னா தொகுதியை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக்கொடுத்தது. இருந்தாலும் கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.-விற்கு அந்த தொகுதியை தனக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என யோகேஷ்வரா வேண்டுகோள் விடுத்தார். இல்லையென்றால் சுயேட்சையாக போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் அவருக்கு வாய்ப்பு வழங்க விரும்பியது. ஆனால் அதை யோகேஷ்வரா விரும்பவில்லை. பா.ஜ.க. வேட்பாளராக தன்னை குமாரசாமி ஆதரிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், கட்சியால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.