புதுச்சேரி

ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்- ரங்கசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்

Published On 2024-08-02 06:35 GMT   |   Update On 2024-08-02 06:35 GMT
  • மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.
  • ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது.

கூட்டத்தொடரை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நேற்று 2-வது நாளாக புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.

இன்று 3-வது நாள் சட்டசபை காலை 9 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்து 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து 9.05 மணிக்கு பேச தொடங்கினார்.

பிரதமராக மோடி 3-வது முறையாக தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் தலைமையின் கீழ் எதிர்வரும் ஆண்டுகளில் விக்சித்பாரத் 2047 திட்டம் முழுமையாக நிறைவடையும் என உறுதியாக நம்புகிறேன். அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்தது.

இதற்காக ஓய்வின்றி பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்களுக்கு பாராட்டுகள். ஏழை எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக மொத்த உற்பத்தி குறியீடு, தனி நபர் வருமானம் நிலையாகவும், சீராகவும் வளர்ந்து வருகிறது.

கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்வதன் முக்கியத்தவத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டின் பட்ஜெட் ரூ.12 ஆயிரத்து 700 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6 ஆயிரத்து 914.66 கோடி அரசின் சொந்த வருவாய். பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3 ஆயிரத்து 268.98கோடி. மத்திய சாலை நிதி ரூ.20 கோடி மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2 ஆயிரத்து 66 கோடியே 36 லட்சம் கடன்தொகையாக திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரத்து 969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காககவும், ரூ.ஆயிரத்து 730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த நிதியாண்டிலும் அனைத்து துறைகளுக்குமான சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 442.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கு ரூ.ஆயிரத்து 403.46 கோடியும், இளைஞர்களுக்கு ரூ.516.81 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ.521.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 574 கோடி சம்பளத்துக்கும், ரூ.ஆயிரத்து 388 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.ஆயிரத்து 817 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2 ஆயிரத்து 509 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, கியாஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.ஆயிரத்து 900 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.ஆயிரத்து 82 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிமை பொருள் வழங்கும் துறையின் கீழ் இலவச அரிசியுடன் மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News