புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ. 200 கோடி மோசடி

Published On 2024-08-06 05:06 GMT   |   Update On 2024-08-06 05:06 GMT
  • கும்பலின் தலைவன் அசாம்கானை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
  • விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து பெற்று ஏமாற்றியது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த கும்பலை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மாறு வேடத்தில் சென்று சுற்றி வளைத்து 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபம் ஷர்மா (வயது 29), நிரஜ்சூர்ஜார்(29), உத்தர காண்டை சேர்ந்த ராஜ் கவுண்ட்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைவனாக கொண்டு புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து 3,400 பேரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஒரு மாதத்திற்கு ரூ.6 கோடி என இலக்கு வைத்து அவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

இந்த நிலையில் கைதானவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இதில் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

ஏற்கனவே 3,400 பேரிடம் மோசடி செய்த அந்த கும்பல் மேலும் 360 பேரை தங்கள் வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் மாநில வாரியாக ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த பெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலின் தலைவன் அசாம்கானை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த மோசடி கும்பல் தலைவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி கொள்வதால் அவனை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனினும் ஓரிரு நாளில் அவன் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கி கொள்வான் என்று சைபர் கிரைம் போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.

Tags:    

Similar News