புதுச்சேரி

புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது- ரங்கசாமி ஆதங்கம்

Published On 2024-08-17 04:57 GMT   |   Update On 2024-08-17 04:57 GMT
  • புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினார். விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜவகர் சிறுவர் இல்ல மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முழு அதிகாரம் வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் புதுச்சேரிக்கு மேலும் வளர்ச்சியை கொண்டுவர முடியும்.

அதற்காக தான் மாநில அந்தஸ்து, முழு அதிகாரம் வேண்டும் என்று சட்டசபையில் ஆண்டு தோறும் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

இப்போது புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தற்போது புதுச்சேரிக்கு உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு கூடுதல் வளர்ச்சியை கொண்டு வர முடியும்.

புதுச்சேரியில் தியாகிகளுக்கான பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் தியாகிகளுக்கு மனை பட்டா வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News