புதுச்சேரி

புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களுக்கு சீல்

Published On 2024-10-18 05:58 GMT   |   Update On 2024-10-18 05:58 GMT
  • சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை.
  • மசாஜ் சென்டர்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

இந்திய அளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் தேடப்படும் பட்டியலில் புதுச்சேரி இடம் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

புதுச்சேரிக்கு தனித்த அடையாளங்கள், வரலாற்று சிறப்புகள் பல இருந்தாலும், வெளியூர்காரர்கள் புதுச்சேரியை கேளிக்கை நகரமாகவே நினைக்கின்றனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை.

இதன் காரணமாக கட்டுப்பாடற்ற ஒரு சுற்றுலாப்பிரதேசமாக புதுச்சேரி உருவெடுத்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணவோட்டமும் தாராளமான மது, கஞ்சா என தொடங்கி மாதுவரை எல்லையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

சுற்றுலா பிரதேசமாக மாறிய புதுச்சேரி அதற்கான பின் விளைவுகளையும், உள்ளூர் மக்கள் மெல்ல உணர ஆரம்பித்துள்ளனர். கஞ்சாவுக்கு அடுத்து பெரும் தலைவலியாக மசாஜ் சென்டர்என்ற பெயரில் விபசாரமும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

இதற்கான பிரத்யேக இணையதள செயலியை வைத்து வாடிக்கையாளர்களை ஆன்லைன் புக்கிங் செய்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மசாஜ் சென்டர்களுக்கு கடி வாளம் போட அரசு உத்தர விட்டுள்ளது. முதல்கட்டமாக புதுச்சேரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் குறித்து போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் கணக்கெடுத்து வருகின்றனர்.

இத்தகைய மசாஜ்சென்டர்களை யார் நடத்துகிறார்கள், மசாஜ் அல்லது ஆயுர்வேத முறை என எந்த பெயரில் இருந்தாலும், இதற்காக பிரத்யேக பயிற்சி மற்றும் கல்வி தகுதி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என பல்வேறு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை இத்தகைய சென்டர்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

அனுமதியில்லாத மசாஜ் சென்டர்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி அனுமதியில்லாமல் சந்தேகத்துக்கு இடமாக இயங்கும் மசாஜ் சென்டர்களை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News