சிறப்புக் கட்டுரைகள்

திரையிசையில் தனித்துவமிக்க எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்!

Published On 2024-09-27 07:48 GMT   |   Update On 2024-09-27 07:48 GMT
  • குரல் மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது.
  • “வாராயோ தோழி” பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சிகளில் இறுதிச் சுற்றுக்குக்கூட எடுத்துப் பாடுவதற்கு பயந்து ஓடுகிறப் பாடல் ஒன்று இருக்கிறது! அதுதான் 'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குதான் என எண்ண வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமைத்தப் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார்.

தொடர்ந்து கோரஸ் பாடி வந்த எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வந்தது ஒரு சோதனை.


"மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்தில். "அழைக்காதே... நினைக்காதே" என்று அஞ்சலிதேவி பாடும் பாடலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருந்தார் தன் அம்மாவுடன்.

ஒலிப்பதிவு செய்துக் கொண்டிருந்த ரங்கசாமி, அந்த இரட்டை சடை போட்ட பெண்ணை வெளியே போக சொல்லுங்க. குரல் தனியே கேட்குது என்று கடிந்துக் கொள்கிறார்.

இதையடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி வெளியே அனுப்பப்படுகிறார். வெளியே வந்தவர் நெஞ்சில் ஒரு வேகம், இவருடைய வாயாலேயே பாராட்ட வைப்பேன், இது எனக்கு ஒரு சவால் என்று மனத்திற்குள் உறுதி எடுக்கிறார்.

அடுத்த ஆண்டே, ஏ.பி. நாகராஜன் இயக்கிய, "நல்ல இடத்து சம்பந்தம்" என்றப் படத்தில் முதன் முதலாக இரண்டுக்கு மேல் தனிப் பாடல்கள் பாட எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாய்ப்புத் தருகிறார். கே.வி. மகாதேவன் இசையமைப்பாளர்.

எல்.ஆர்.ஈஸ்வரி ,ஒலிப்பதிவு செய்யப் போவது யார் என்று கேட்கிறார் கே.வி.எம்மிடம். ஏன் ரங்கசாமிதான் என்கிறார்.

எல்.ஆர்.ஈஸ்வரி உடனே ஏ.பி. நாகராஜனிடம் சென்று, "சார் நான் பாடவில்லை, ஒலிப்பதிவின்போது அவர் என்னை ஏதாவது சொல்லிவிட்டால்..?" என்கிறார்.

ஏ.பி. நாகராஜன், எத்தனை நாளைக்கு கோரஸ்லே பாடுவாய்? அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று தைரியம் கொடுத்து பாடச் சொல்கிறார்.

முதல் படத்திலேயே பிரமாதமாக பாடிவிடுகிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. பிறகு அேத ரங்கசாமி அவர்களின் வாயால், "இது நம்ம பொண்ணுப்பா நல்லா பாடுது" என்று சொல்ல வைத்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. அவரது சபதம் பலித்த நாள் அது.


1959ல் அமுதவல்லி படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து "கண்கள் ரெண்டும் வண்டு நிறம்" என்றப் பாடலை பாடினார். பெண்கள் ஜோடிக் குரல் என்றாலே, பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரிதான் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஆனது.

இந்த இருவர் பாடிய ஜோடிப் பாடல்கள் அத்தனையும் ஒன்று கூட சோடை போனதில்லை. கலக்கல் ஹிட்தான்.

பாசமலர் படத்தில் ஒருபாடலுக்கு கோரஸ் பாடுகிறார். "பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை". என்றப் பாடல்தான் அது. ஒத்திகை பாடல் பதிவு என்று நாள் முழுக்க பாடி பாடி ஓய்ந்த போது, திடீரென்று மெல்லிசை மன்னர்கள் "வாராயோ என் தோழி வாராயோ" பாடலையும் நீயே பாடும்மா என்கிறார்கள்.

பொழுதெல்லாம் பாடி பாடி ஒய்ந்தக் குரலில் பாட்டைப் பாடிப் பார்த்தால் குரலே வரவில்லை. தனியாகப் பின்னணிப் பாட வாய்ப்புக் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அவர்களைப் பார்க்க, சரிம்மா வீட்டுக்குப் போய்விட்டு நாளைக்கு வந்து பாடும்மா என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

எல்.ஆர்.ஈஸ்வரிக்கு தொண்டையை சரி செய்யக் கூட நேரமில்லை. மறுநாள் வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் கவலைகள் பாடாய் படுத்தியது. எனினும் மறுநாள் அந்த பாடலை சிறப்பாக பாடி முடித்தார்.

"வாராயோ தோழி" பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வரவேற்பு பெற்ற பாடல் அது. மணப்பெண் வரவேற்பின்போது முதலில் ஒலிக்கும் பாடல் இது.

ஆண் குரல் மட்டும் ஒலிக்கும் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங், பாடல் முழுக்க இடம் பெற்ற ஒரு முன் மாதிரி பாடலும் இவருக்கு வாய்ந்தது. "கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா?, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... மன்னவன் மட்டும் அங்கிருக்க மற்றும் வீடு வரை உறவு வீதி வரை மனைவி" போன்றப் பாடல்களில் வரும் ஹம்மிங்கை யார்தான் மறக்க முடியும்.

தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக வெண்ணிற ஆடை படத்தில்ஜெயலலிதா நடித்தப்போது அவருக்கு பின்னணி குரல் கொடுத்த முதல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிதான்.


"கறுப்புப் பணம்" என்றொரு திரைப்படம் கவியரசர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பு. இதில் இரவு வேளையில் படகில் போய்க் கொண்டே தோழியிடம் தன் காதலைப் பற்றியும் காதலனைப் பற்றியும் பாடும்பாடல்.. ரகசியமான வரிகளுக்கேற்றபடி குறைந்த ஸ்தாயில் பாட வைக்க மெல்லிசை மன்னர்கள் முடிவெடுக்கிறார்கள்.

தயாரிப்பாளர் என்ற முறையில் கவியரசர், ஈஸ்வரியை வைத்து இந்த பாட்டை பாடச் சொல்லுங்கள் என்கிறார். இரட்டை இருக்கோ, ஈஸ்வரி மெல்லியக் குரலில் பாடினால் சரி வருமா? என்கிறார்கள்... கொடுத்துதான் பாருங்களேன் என்கிறார் கவியரசர்.

சரி, புதுமையாக முயற்சிக்கலாம் என்று பாட வைத்தார்கள். "அம்மம்மா கேளடி தோழி, சொன்னானே ஆயிரம் சேதி" என்ற அந்தப் பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இருந்த வேறொரு பரிமாணத்தையும் காட்டிக் கொடுத்தது.

இவரது குரலின் தனித்தன்மை, மூச்சடக்கும் தன்மை, எவ்வளவு உச்சஸ்தாயிக்கு போனாலும் பிசிறில்லாத உடையாத குரல் எல்லாம் சேர்ந்து, உல்லாச விடுதிப் பாடல்கள் என்றாலே அது எல்.ஆர்.ஈஸ்வரிதான் என்று மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது. மயக்கும் தொனியில் இவர் பாடிய பாடல்களுக்கு இசைப்பிரியர்கள் நடுவே தனி வரவேற்பு உண்டு.


சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலில் வந்த சவுக்கடி வலிக்கு துடிக்கும் துடிப்பு அசாத்தியமானது. அந்த துடிப்பு ஒலி அடிவயிற்றிலிருந்து தர வேண்டும். அதுவும் தாள அளவுக்குள்...

இந்தியில் இந்தப் படத்தை எடுத்தப்போது இதே காட்சிக்கு லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். அவர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலை கேட்டுவிட்டு இது யார் பாடியது? என்று கேட்டிருக்கிறார்.

எல்.ஆர்.ஈஸ்வரிப் பற்றி சொன்னதும், வியந்து போய் எல்.ஆர்.ஈஸ்வரியை தேடி வந்து பாராட்டிவிட்டு சென்றார்.

கத்தோலிக்க கிருஸ்தவராக இருந்தாலும் இவர் அம்மனைப் பற்றி பாடினால் உருகாத உள்ளங்களே இல்லை எனலாம். ஆடி மாதத்தில் இவரது கச்சேரிக்கு நாட்கள் கிடைப்பது அரிது என்கிற அளவில் இன்றும் கோவில்கள் தோறும் ஒலிக்கும் இவரது குரல் மதங்களுக்கிடையே உள்ள பேதங்களை களைந்து விட்டது என்றே சொல்லலாம்.

இவர் பின்னணி பாடகியாக பிரபலமானவுடன், நீ உன் பெயரை மாற்றிக்கொள் என்று ஏ.பி. நாகராஜ் மற்றும் கே.வி. மகாதேவன் இருவரும் வலியுறுத்தினர். லூர்துமேரி ராஜேஸ்வரி என்ற பெயரை எல்.ஆர்.ஈஸ்வரி என்று அவர்கள் மாற்றி வைத்த ராசி அவர் திரையிசையில் மிகவும் பிரபலமானார்.

Tags:    

Similar News