சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே! அத்தியாயம் - 19

Published On 2025-02-20 14:41 IST   |   Update On 2025-02-20 14:41:00 IST
  • “என்ன சார்... பார்த்தா வயசானவங்களா தெரியுது. நீங்க எத பறிகொடுத்தீங்க...”
  • ‘தங்களை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் விக்கித்து நின்றனர் லிசாவும், தேவசகாயமும்.

"அழகர்... எஸ்.பி. பேசுறேன்!"

"ஐயா... சொல்லுங்கய்யா..."

"என்னய்யா திவ்யான்னு பொண்ணை உன் ஜூரிஸ்டிக்ஸன்ல வெச்சு காணோம்னு அவங்க அண்ணன் பெருமாள் வந்திருக்காரு... கேர்லஸ்ஸா டீல் பண்றியாய்யா?"

"இல்லீங்கய்யா... இப்பக்கூட ஒரு லீட் கிடைச்சு பண்ணையார்பட்டியில தான் விசாரணையில இருக்கேன் ஐயா..."

"எனக்கு இன்னிக்குள்ள அந்த பொண்ணை பத்தின பாசிட்டிங் ரிப்போர்ட் வரணும்..."

"சரிங்கய்யா..."

போனை கட் பண்ணின எஸ்.பி. பெருமாளிடம், "பெருமாள்... அழகர் பண்ணையார்பட்டியில என்கொய்ரில இருக்காரு... எப்படியும் இன்னிக்குள்ள பாசிட்டிவ் நியூஸ் வந்துரும்!" என கூற, சற்று பதட்டமாவே பெருமாள், "சார் நானும் என் ஆட்களோட அந்த ஏரியாவுக்கு போய் தேடலாம்னு இருக்கேன்..."

"அப்போ போலீஸ்மேல இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலை... அப்படித்தானே?"

"அப்படி இல்ல சார்... நாங்க தேடுறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?"

"நோ இஷ்யூ... தாராளமா நீங்களும் களம் இறங்கித் தேடுங்க... பட்... போலீஸ்க்கோ, பப்ளிக்குக்கோ தொந்தரவா இருக்கக்கூடாது. ஏன்னா... நீங்க அரசியல்வாதிங்க... அதுக்கு சொல்றேன்..."

"நீங்க சொன்ன மாதிரி தொந்தரவு வராம பார்த்துக்கிறேன் சார்... நன்றி!"

"ம்... புகார் மனுல உங்க கான்டாக்ட் நம்பர் இருக்குல்ல..."

"இருக்கு சார்..."

"சரி... ஏதாச்சும் அர்ஜன்டுனா, கால் பண்றோம்.. போயிட்டு வாங்க...!"

கை கூப்பி, அனுப்பி வைத்தார்.

போலீஸ் ஸ்டேஷன்.

"அப்படி போய் உக்காருங்கய்யா... இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. எல்லாம் வந்ததும் உங்க சூட்கேஸ் பஸ் ஸ்டாண்டுல காணாம போன கம்பளைண்ட் வாங்கிக்கிறேன்..."

அந்த இருவரையும் ஏட்டு, எரிச்சலுடன் அமர சொல்ல, அவர்கள் பெஞ்சில் அமர்ந்தனர்.

"ம்... பஸ் ஸ்டாண்ட்ல சூட்கேச எவனோ அடிச்சுட்டான்னு கம்ப்ளயிண்ட் குடுக்க வந்தா... இப்படி காக்க வெக்குறாங்களே மச்சான்..." அந்த இருவரில் ஒருவன் சலித்தபடியே, மற்றொருவனிடம் சொல்லிவிட்டு பார்த்தான்.

எதிர் பெஞ்சில் திவ்யா மற்றும் டேவிட்டின் அப்பா ரங்கராஜன், அம்மா ராஜேஸ்வரி, தேவசகாயம், லிசா அமர்ந்து இருப்பதை பார்த்தனர்.

"என்ன சார்... பார்த்தா வயசானவங்களா தெரியுது. நீங்க எத பறிகொடுத்தீங்க..."

"எங்க பொண்ணை!" - ரங்கராஜன் சொல்ல அவர்கள் மவுனமாகி இவர்களையே பார்த்தனர்.

முருகநத்தம்.

இடது புறம் அம்புக்குறி போட்ட அந்த ரோட்டில் தன் வண்டியை லாவகமாக செலுத்தினான் டேவிட். எதிரே ஒருவர் சைக்கிளில் வர, அவரை கை காண்பித்து நிறுத்தினான். கைக்கிளை நிறுத்தியவர், காருக்குள் எட்டிப்பார்த்தபடி கேட்டார்.

"என்னாங்க...?"

"நீங்க முருக நத்தமா...?"

"ஆமா... ஏன்?"

"வித்தியாசமா இந்தப் பக்கமா கார் எதாவது போனத பார்த்தீங்க...?"

"இல்லீங்கோ... ஆனா... வேட்டக்காரன் பங்களாவுல ஒரு காரு நின்னுச்சு. அப்புறம் போயிடுச்சு. அப்பாவியாய் சொன்னார் அந்த மனிதர்."

"வேட்டைக்காரன் பங்களாவா?"

"ஆமா தம்பி... பிரிட்டிஸ்காரன் காலத்துல அவங்க முருகநத்தம் காட்டுல வேட்டைக்கு போவாங்க... அப்ப ரெஸ்ட் எடுக்க கட்டுன பங்களா... இப்போ சிதிலமாகி கிடக்கு!"

"அங்கத்தான் அந்த கார பார்த்தீங்களா...?"

"நன்றிங்க ஐயா...!"

என கூறிவிட்டு, அவர்கள் காரை கிளப்பி செல்ல, கிராமத்துக்காரர் குழப்பமாய் சைக்கிளை ஓட்டியபடி எதிர்திசையில் சென்றார்.

 

இயக்குநர் A.வெங்கடேஷ்

போலீஸ் ஸ்டேஷன்.

"ஐயா... இந்த லெட்டரையும், பாக்சையும் பிடிங்க! "

போலீஸ் ஸ்டேஷன் ஏட்டையாவுக்கு தெரியாமல், சூட்கேசை பறிகொடுத்ததாக வந்ததில் ஒருவர் ரங்கராஜனிடம் நீட்டினான்.

"என்ன இது...?" ரங்கராஜன் கேட்டார்.

"உங்க பொண்ணு சம்பந்தபட்டது உள்ள இருக்கு. சத்தம் போடாம பிரிச்சு பாருங்க.. போலீஸ் ஸ்டேஷனில், சூட்கேஸ் காணாமல் போனதாக கூறி, அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்த இருவரில் ஒருவன் அந்த லெட்டரையும், பாக்சையும் கொடுக்க, மொத்த குடும்பமும் அதிர்ந்தது அல்லவா!

"நாங்க.. அந்த ஜன்னலுக்கு வெளியே நிக்கிறோம்: பாக்சை திறந்து பார்த்துட்டு வாங்க.. இருவரும் எழுந்து போய் ஸ்டேஷன் வெளிப்புறம் நின்று இவர்களேயே பார்த்து கொண்டு நின்றனர். ரங்கராஜன் கடிதத்தை பிரித்தார்.

"பெண்ணை பெற்ற அப்பனே!

உன் பெண் சம்பந்தப்பட்டது, அந்த சின்ன பாக்சில் உள்ளது. முதல்ல.. நீ பாரு! அப்புறம் பெருமாளுக்கு காட்டு. உன் மருமகன் டேவிட், திவ்யாவை தேடி கிளம்பி வந்திருக்கான் இல்லியா... அவன்கிட்ட நேரில் நான் பேசிக்கொள்கிறேன்.

விளையாட்டு தொடரும்."

அன்பில்லாத - நல்லவன்!

லெட்டரை படித்துவிட்டு, நடுங்கும் விரல்களால் அந்தப் பெட்டியை பிரிக்க, ராஜேஸ்வரி, லிசா, தேவசகாயம் பதட்டத்துடன் பார்த்து கொண்டிருக்க...

அதேநேரம் ஒரு சிகரெட்டை கோபமாக உறிஞ்சி, புகையை வெளியிட்ட, இன்ஸ்பெக்டர் அழகர், "அந்த பெருமாள், எஸ்.பி. ஆபீஸ்ல போயி புகார் கொடுத்தா, அவன் தங்கச்சி திவ்யாவ மேஜை டிராயர்ல இருந்து எஸ்.பி எடுத்து குடுத்துடுவாரா. நாமதான கண்டுபிடிக்கணும். அது தெரியாம லூசுப்பய மாதிரி எஸ்.பி. ஆபிசுக்கு போயிருக்கான்..."

என கடுப்பாய் பேசிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி தூக்கி வீசியவர், பக்கத்தில் அவரையே பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் மணியை பார்த்தார்.

"என்னய்யா... 'வாட்ஸ் - அப்ல அந்த திவ்யாவோட புருஷன், டேவிட்டுக்கு, நீ மெசேஜ் அனுப்பினியே... அவன் இந்நேரம் முருக நத்தம் 'போயிருப்பான்ல...!"

கான்ஸ்டபிள் மணி அதிர்ந்தார்.

என்னடா இது. யாருக்கும் தெரியாம தானே மெசேஜ் அனுப்பினேன். இந்த ஆளுக்கு எப்படி தெரிஞ்சது.? குழப்பமாய் அழகரை பார்த்தார் கான்ஸ்டபிள் மணி. "என்ன பாக்குறே... நீ பானையில் இருக்கிற சோறுதான்... நான் அந்த சோற்றையே பொங்க வைக்கிறவன்டா...!"

மணி பதட்டமாய் பார்த்தான்.

"பயப்படாத... நம்ம டிபார்ட்மெண்ட்ல 'ஐந்தாம் படை' களை ஆயிரம் தடவ பார்த்தவன் நான். ஆமா... இந்நேரம் உன் மெசேஜ்ஜை பார்த்த ஹீரோ' ஸ்பாட்டுக்கு போயிருப்பான் இல்ல...?"

முருக நத்தம்...

'உய்' என்ற காத்தைத்தவிர, ஒரு வண்டு கூட அங்க இல்ல. வெறும் மரங்களும், வெட்கையும் மட்டுமே டேவிட் மற்றும் அவன் நண்பர்களுக்கு தெரிய, அந்த காட்டுக்கு நடுவே தெரிந்த சிதிலமான அந்தகால கட்டிடமான 'வேட்டைக்காரன் பங்களா' கண்ணில் பட்டது. வேகமாக அந்த பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வயிற்றுக்குள் பயமும், நினைவுக்குள் திவ்யா முகமும் வந்து போக 'கடவுளே... திவ்யாவுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது...' வேண்டியபடி பங்களாவை அடைந்த டேவிட், நண்பர்களை தாண்டி வேகமாய் ஓடிச்சென்று அந்த பங்களாவின், அந்த இத்துப்போன பழைய கதவை ஓங்கி மிதித்து திறந்தான். அரையிருட்டில், பங்களாவுக்குள் நுழைந்த டேவிட் அதிர்ந்தான்.

போலீஸ் ஸ்டேஷன்...

லிசா, தேவசகாயம், மனைவி ராஜேஸ்வரி மூவரும் பதட்டமாய் பார்க்க அந்த சின்ன பாக்சை திறந்த ரங்கராஜன் அதிர்ந்தார். உள்ளே இரண்டாக வெட்டப்பட்ட தாலி.

டேவிட், திவ்யா கழுத்தில் கட்டிய தாலி.

புதுமணம் இழக்காத அந்த தாலி அறுந்து இருப்பதை கண்டு அலறினாள் ராஜேஸ்வரி.

"ஐயோ... படுபாவி, அவ தாலிய கட் பண்ணி அனுப்பி இருக்கானே... நல்லா இருப்பானா...

மனுசனா.. இல்லை அவன் மனநிலை சரி இல்லாத சைக்கோவா...?'

ராஜேஸ்வரி அலறும் போதே, ரங்கராஜன் தோளை தட்டிய அந்த இருவரில் ஒருவன், அவன் போனை நீட்டினான்.

"தலைவர் பேசணுமாம்!"

ரங்கராஜன் போனை வாங்க, போனை கொடுத்தவன் ராஜேஸ்வரியிடம், "இந்தாம்மா.. கத்தி கூச்சல்போட்டு போலீஸ் ஸ்டேஷனை உஷாராக்கி எங்களை மாட்டிவிட்ட, உன் பொண்ணு காலி! உணர்ச்சிவசப்பட்டு கத்தணும்னு தோணுசுனா உனக்குள்ள கத்திக்கோ...!" என ஒருவித மிரட்டும் தொனியில் சொல்ல அமைதியானாள் ராஜேஸ்வரி.

'தங்களை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் விக்கித்து நின்றனர் லிசாவும், தேவசகாயமும்.

நடுங்கும் விரல்களால் போனை தன் காதில் வைத்தார் ரங்கராஜன்.

என்ன திவ்யா அப்பா!... நாதான் பேசுறேன்.

"தாலிய கட் பண்ணி அனுப்பினதும், தலை சுத்தி இருக்குமே... பெருமாளுக்கு தகவல் சொல்லிட்டு, ஸ்டேசன்லயே இருங்க. அடுத்து அடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கு... வைக்கட்டா..

"ஹலோ... ஹலோ... யார்ரா நீ... எதுக்கு இப்படி எல்லாம் பண்ற... சொல்லு... யார் நீ!"

"நான் யாருன்னு சொல்லாம, தெரியாம, இந்த கதை முடியாது. போ... போயி... பெஞ்சுல உட்கார்ந்து வெயிட் பண்ணு.. மீண்டும் வரேன்... பை!"

போன் துண்டிக்கப்பட்டது. போனை வாங்கியவன், "நாங்க உங்களை கவனிச்சுக் கிட்டு தான் இருப்போம்... அதுக்காகதான் சூட்கேஸ் காணோம்னு கம்ப்ளெயிண்ட் பண்ற மாதிரி ஸ்டேஷன்குள்ள வந்துருக்கோம்னு., புரியும்னு நினைக்கிறேன். இங்க பாரு...!"

அவன் சட்டையை தூக்கி காட்ட இடுப்பில் மறைவாய் உட்கார்ந்து இருந்தது அந்த ரிவால்வர். ரங்கராஜன் மிரள மிக கோரமாய் சிரித்தான் அவன்.

(தொடரும்)

E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

Tags:    

Similar News