சிறப்புக் கட்டுரைகள்
null

ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி: 'கிருமிக்கொல்லி' பெருங்காயம்

Published On 2023-04-19 11:17 GMT   |   Update On 2023-04-19 12:25 GMT
  • தமிழர்களின் சமையல் கலையில் பெருங்காயம் இல்லாத உணவே இல்லை என சொல்லலாம்.
  • சித்த மருந்துகளில் வாதத்தை குறைக்கும் பல மருந்துகளில் பெருங்காயம் சேருவதும் குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் பெருமை உடையவை அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் தான். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மணமூட்டியான 'பெருங்காயம்'. பண்டைய பாரசீக நாட்டில் 'கடவுளின் உணவு' என்ற பட்டப்பெயருடன் உணவில் மணமூட்டியாக மட்டுமின்றி மருத்துவ குணமூட்டியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகை கடைச்சரக்கு 'பெருங்காயம்'.

உணவில் நாம் பயன்படுத்தும் பெருங்காயம் எனும் நறுமணப்பொருள், மூலிகையில் இருந்து கிடைக்கும் ரெசின் வகையை சார்ந்தது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட மூலிகைத் தாவர இனம் இது. இருப்பினும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சித்த மருத்துவத்திலும் பெருங்காயம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் சமையல் கலையில் பெருங்காயம் இல்லாத உணவே இல்லை என சொல்லலாம். கொத்துமல்லி இலையும், கறிவேப்பிலையும் சேர்த்த மோரில் கொஞ்சம் பெருங்காயம் தூவி எடுத்துக்கொள்வது கோடைக்கால அமிர்தம். புளி ரசத்தில் தூவும் பெருங்காயத்தால் அதன் மணமும், குணமும் நாடிநரம்புகளை சுண்டி இழுக்கும் என்பதை அறியாதவர் இல்லை. இன்னும் பல்வேறு உணவுகள் பெருங்காயம் இல்லாமல் முழுமை பெறாது.

வெங்காயம், பூண்டு பயன்படுத்தாதவர்களும் உணவில் மணத்திற்க்காக பயன்படுத்துவது பெருங்காயத்தைத் தான். தனக்கே உரிய சுண்டி இழுக்கும் மணமும், கசப்பு சுவையும், காரத்தன்மையும் கொண்ட மசாலாப் பொருளான பெருங்காயம் எண்ணிலா மருத்துவ குணத்தையும் உடையது. பெருங்காயத்தின் மணத்திற்கு அதில் உள்ள நூற்றுக்கணக்கான சல்பர் வேதிப்பொருட்களே காரணம் என்கிறது நவீன அறிவியல். அதன் மருத்துவ குணத்திற்கு அதில் உள்ள 'பெருலிக் அமிலம்' எனும் வேதிப்பொருள் தான் காரணமாகின்றன.

அத்தகைய பெருங்காயம் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பல நோய்நிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நேபாள நாட்டில் வயிற்றில் இருக்கும் புழுக்களை கொல்வதற்கும், மலேசியாவில் மாதந்தோறும் முறையாக இருக்க வேண்டிய மாதவிடாய் தடைபட்ட காலத்தில் அதனை சீராக்கும் பொருட்டும், ஆப்கானிஸ்தானில் கக்குவான் இருமலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய ஐரோப்பிய நாட்டில் அடிக்கடி கிருமித்தொற்றுக்கள் அண்டாமல் இருக்க, பெருங்காயத்தை குழந்தைகளின் கழுத்தில் கட்டி தொங்க விடுவது பழக்கமாக இருந்தது என்றும் நூல்கள் தெரிவிக்கின்றன. பெருங்காயம் ஆண்மையை அதிகரிக்கும் தன்மைக்காகவும் பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மொரோக்கோ நாட்டில் காக்கா வலிப்பினை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதத்தை குறைத்து நோய்களை விரட்டுவதில் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான ஓமத்திற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது பெருங்காயம் தான். சித்த மருந்துகளில் வாதத்தை குறைக்கும் பல மருந்துகளில் பெருங்காயம் சேருவதும் குறிப்பிடத்தக்கது.

குடலில் உண்டாகும் வாதத்தை அதாவது வாயுவைக் குறைக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு. அதனால் தான் வாயுவை அதிகரிக்கும் சுண்டல், பருப்பு, பயிறு வகைகள் போன்ற பல உணவுகளில் பெருங்காயம் தூவப்படுவது வாதத்தைக் குறைத்து நோய்களை தடுக்கவே என்பது இலை மறைகாய். சித்த மருத்துவத்தில் 'பெருங்காய சூரணம்' எனும் மருந்தும் வாத நோய்களை போக்க பயன்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பு.

பொரித்த பெருங்காயத்துடன் ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு இவற்றை சேர்த்து எடுத்துக்கொள்வது அசீரணம், வயிற்றுப்பொருமல், மந்தம் ஆகிய நோய்நிலைகளில் நன்மை பயக்கக்கூடியது. அதே போல் பெருங்காயத்தை ஓமக்கசாயத்துடன் அல்லது ஓமத் தீநீருடன் எடுத்துக்கொண்டாலும் மேற்கூறிய நிலைகளில் நற்பலன் தரும்.

பெண்களுக்கு உதவும் அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளில் முதன்மை இடத்தைப் பிடிப்பதும் பெருங்காயம் தான். கருப்பையை உரமாக்கும் தன்மைக்காகவும் பெருங்காயம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மாதவிடாய் சுழற்சியை தூண்டுவிக்கும் தன்மை இதற்குண்டு. மாதவிடாய் காலங்களில் வலியால் அவதிப்படும் பெண்கள் அஞ்சறைப்பெட்டியில் உள்ள சோம்பு, ஓமம் இவற்றைக் கசாயமாக்கி அதில் சிறிது பெருங்காயம் சேர்த்து எடுத்துக்கொள்வது வலியைக் குறைத்து நிம்மதியைத் தரும். குடலில் அதிகமான வாயுவால் உண்டான இசிவைக் குறைத்து நிம்மதியான தூக்கம் உண்டாக்கும் தன்மையும் பெருங்காயத்திற்கு உண்டு.

ஆனால் கர்ப்பிணி பெண்கள் பெருங்காயத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. பெண்களின் பிரசவத்திற்கு பின்னர் வெளியேறும் 'லோகியா' எனும் அழுக்கினை எளிதில் வெளியேற்ற பெருங்காயத்தை, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து முதல் ஐந்து நாட்கள் கொடுக்கும் பழக்கம் இன்றும் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.

நாம் உணவில் பயன்படுத்தும் பெருங்காயம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்பதற்கு வரலாற்று உண்மைகள் உள்ளதும் சிறப்புமிக்கது. 2020-ஆம் ஆண்டு உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா நோய்த்தொற்றினைப் போல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னதாக 1918-ம் ஆண்டு 'ஸ்பானிஷ் ப்ளூ' எனும் காய்ச்சல் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கியதாக அறியப்படுகின்றது.

அத்தகைய கால கட்டத்தில் கிருமி தொற்றின் அச்சத்தில், வழி தெரியாது விழி பிதுங்கி கிடந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் மூலிகை மருந்தாக பெருங்காயம் இருந்ததாக தெரியவருகிறது. இன்னும் சொல்லப்போனால், ஸ்பானிஷ் ப்ளூ நோய்த்தொற்று வராமல் தடுக்கும் பொருட்டு பெருங்காயத்தை தாயத்தாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் என்றும் ஏடுகள் குறிப்பிடுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க பெருங்காயத்தை தமிழர்கள் உணவில் சேர்ப்பது என்பது சித்த மருத்துவம் நம் உணவு முறைகளோடு ஒன்றிணைந்தது என்பதற்கு மற்றுமொரு சான்று.

அதே போல் தைவானில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில், ஸ்வைன் ப்ளூ எனும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பயன்படுத்தப்படும் 'அமான்டைடின்' மருந்தைப்போல பெருங்காயமும் சிறப்பான பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இன்னும் பல்வேறு ஆய்வு முடிவுகள், பெருங்காயம் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் என்பதற்கு சான்றளிப்பதாக உள்ளது. எனவே பெருங்காயத்தை 'அஞ்சறைப்பெட்டியின் கிருமிக்கொல்லி' என்றே கூறலாம்.

பெருங்காயத்தில் மருத்துவ குணமளிக்கும் வேதிப்பொருள்கள் மட்டுமல்லாது உடலுக்கு அத்தியாவசியமான கனிம உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின் ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, பெருங்காயம் மருத்துவ குணமுள்ள மணமூட்டியாக மட்டுமின்றி, ஊட்டமளிக்கும் கடைச்சரக்காகவும் உள்ளது கூடுதல் சிறப்பு. பெருங்காயத்தில் 10 முதல் 17 சதவீதம் நறுமண எண்ணைய் உள்ளது. நறுமணத்தை தரும் அந்த எண்ணையில் கிட்டத்தட்ட 150 வகையான வேதிப்பொருட்கள் உள்ளன.

வயிற்றுப்புண் அல்லாத நாட்பட்ட அசீரண நோய்நிலையில் பெருங்காயத்தை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தருவதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. ஆக, அசீரண பாதிப்பால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பயனளிக்கும். வயிற்றுப்பொருமலைக் குறைக்கும்.மலச்சிக்கலைப் போக்கும்.

பெருங்காயம் சீரண மண்டலத்தில் உள்ள சீரண நொதிகளின் சுரப்பினை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை துரிதமாக்க பேருதவி புரிகின்றது. மேலும் கணையத்தில் உள்ள லிபேஸ் எனும் நொதிச்சுரப்பினை அதிகமாக்கி கொழுப்பு பொருட்களின் செரிமானத்தை துரிதமாக்கும்.

ஆர்த்ரைட்டிஸ் எனும் மூட்டு வாதத்திற்கு, பெருங்காயத்தைக் கொண்டு எலிகளில் நடத்திய சோதனை முடிவில், அது மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளைத் தடுத்து வீக்கத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் மூட்டுக்களில் உள்ள குருத்தெலும்புகள் தேய்மானத்தைத் தடுப்பதாக உள்ளதும் அறிய வந்துள்ளது. இதற்கு பெருங்காயத்தில் உள்ள 'பெருலிக் அமிலம்' எனும் வேதிப்பொருளே காரணம் என்றும் நவீன அறிவியல் தெரிவிக்கின்றது.

சித்த மருத்துவம் கூறும் மூட்டு வாதத்திற்கு பெருங்காயம் உதவும் என்று மேல்நாட்டு ஆய்வுகளும் உறுதி செய்வது, சித்த மருத்துவ தத்துவத்திற்கு கூடுதல் வலிமை சேர்ப்பது போன்று உள்ளது. ஆகவே, உணவில் நாம் சேர்க்கும் பெருங்காயம், குடலில் உள்ள வாயுவை மட்டும் நீக்காமல், மூட்டு வாதத்தையும் குறைக்கும் என்பது இதில் வெளிப்படை.

அஞ்சறைப்பெட்டி கடைசரக்கான மஞ்சள், மிளகு மற்றும் வெள்ளைப் பூண்டினைப் போல பெருங்காயமும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுவது சிறப்புமிக்கது. மேற்கூறிய கடைச்சரக்குகள் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் வாழ்நாளை கூட்டுவதாகவும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. முக்கியமாக மார்பகம், நுரையீரல் மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய் நிலைகளில், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 50 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதை ஆரம்ப கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், புற்றுநோய் உருவாக்கத்தின் அடிப்படை காரணமாக அறியப்படுகின்ற டி.என்.ஏ எனும் மரபணுவின் சிதைவினை பெருங்காயம் தடுப்பதாகவும் உள்ளது. ஆக, நவீன வாழ்வியலில் துரித உணவுகளை நாடி வாழும், இன்றைய தலைமுறையினர் பயன்படுத்த வேண்டிய அஞ்சறைப்பெட்டி சரக்குகள் வரிசையில் பெருங்காயமும் ஒன்று.

பெருங்காயம் தீக்கூறினை உள்ளபடியால், அதாவது உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும். ஆகையால் அளவோடு பயன்படுத்துவது நல்லது. அதே போல் பெருங்காயத்தை பொரித்து பயன்படுத்துவதும் நல்லது. முக்கியமாக குடல் சார்ந்த நோய்களுக்கு பெருங்காயத்தை நெய்யில் பொரித்து பயன்படுத்திடுவது இன்னும் நல்லது. ஏனெனில் பெருங்காயத்தை அப்படியே பயன்படுத்தினால் குடல் அரிப்பு உண்டாக்கக் கூடும்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதைப் போல பெருங்காயத்தை அளவுக்கு மீறி பயன்படுத்துகையில் வாந்தி, மனப்பதட்டம், வயிற்றுப்பொருமல், நரம்பு தளர்ச்சி, கழிச்சல் ஆகிய குறிகுணங்களை உண்டாக்கும் தன்மை உடையது. எனவே பெருங்காயத்தை அளவோடு உணவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News