null
"Timed Out" ஆகிவிடுவோம் என பயந்தாரோ... பாகிஸ்தான் வீரரை கிண்டல் செய்த நெட்டிசன்கள்
- வங்கதேச அணிக்கெதிராக இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் மூலம் வெளியேறினார்.
- அதேபோல் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து அப்ரார் அவ்வாறு வந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல்.
பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.
முன்னதாக பாகிஸ்தான் 136 ரன்னில் 8-வது விக்கெட்டை இழந்தபோது அப்ரார் அகமது பேட்டிங் செய்ய களம் இறங்கிறார். சரியாக கையுறைகளை (Gloves) அணியாமல் அவசர அவசரமாக கையுறையை மாட்டியவாறு மைதானத்திற்குள் வந்தார். அப்போது ஒரு கையுறை கீழே விழுந்தது. அதை எடுத்து சரி செய்யாமல் அப்படியே ஆடுகளத்தை நோக்கி ஓடினார்.
அப்போது சாஹிப் அல் ஹசன் பந்து வீச தயாராக இருந்தார். வங்கதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது திடீரென ஹெல்மெட் சரியில்லாமல் போவதால் வேறு ஹெல்மெட் கேட்பார்.
பின்னர் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய தயாராகும்போது சாகிப் அல் ஹசன், நடுவரிடம் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் மேத்யூஸ் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய தயாராகவில்லை. இதனால் அவுட் கொடுக்க வேண்டும் என முறையிடுவார். நடுவரும் டைம்டு அவுட் (Times Out) கொடுத்துவிடுவார். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் தற்போது சாகிப் அல் ஹசன் அவுட் கேட்டுவிடக் கூடாது என பயந்து அவசர அவசரமாக அப்ரார் அகமது வந்திருப்பாரோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.