கிரிக்கெட் (Cricket)

சரவெடி சாம்சன், சூறாவளி சூர்யா: டி20 தொடரில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

Published On 2024-10-12 17:23 GMT   |   Update On 2024-10-12 17:23 GMT
  • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்களை குவித்தது.
  • அடுத்து ஆடிய வங்கதேசம் 164 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஐதராபாத்:

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தொடக்கம் முதலே ரன் மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், சூர்யகுமார் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது.

சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்தில் சதம் அடித்து, 111 ரன்னில் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரியான் பராக் 13 பந்தில் 34 ரன்னும், பாண்ட்யா 18 பந்தில் 47 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.

இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணியில் ஹிருடோய் தனி ஆளாக போராடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லிட்டன் தாஸ் 42 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி2 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News