null
சாம்பியன்ஸ் டிராபி: பாபர் அசாமுக்கு புதிய ரோல்- ரிஸ்வான்
- நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.
- எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சமீப காலமாக பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தடுமாறி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாபர் அசாம் கடைசி 21 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் தான் சரியான தேர்வு என அந்த அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது, நாங்கள் ஐசிசி தொடர்களில் ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினோம். ஆனால் தற்போது நாங்கள் அந்த ஒரு சதவீதத்தையும் பூர்த்தி செய்து சாம்பியன் பட்டத்தை அடைய முயற்சிக்கிறோம்.
சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.
எங்களிடம் தொடக்க வீரர் இடத்திற்கு நிறைய தேர்வுகள் இருக்கும் நிலையிலும், தற்போது அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் மிகச்சிறந்த தேர்வாக உள்ளார். மேலும் அவரும் அதனை விரும்புகிறார்.
எங்களுக்கு உண்மையான தொடக்க வீரர்கள் வேண்டும். ஆனால் அணியின் தேவைகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக வலுவான பேட்ஸ்மேன் என்பதால் பாபர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அவர் தான் தற்போது எங்கள் அணியின் தொடக்க வீரர் என்று தெரிவித்துள்ளார்.