விளையாட்டு

வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என பயந்தேன் - இந்திய மல்யுத்த பயிற்சியாளர் வோலர் அகோஸ்

Published On 2024-08-17 03:43 GMT   |   Update On 2024-08-17 03:43 GMT
  • வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து வினேஷ் போகத்தின் பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் பேசியுள்ளார்.

"அரையிறுதிக்குப் பிறகு, வினேஷ் போகத்திற்கு 2.7 கிலோ எடை அதிகமாக இருந்தது. எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.

வினேஷ் என்னிடம் பேசிய போது, "நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது" என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News