16 வயது சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தி சீரழிப்பு- புதுவை அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பா?
- புதுவை கோரிமேடு எல்லைக்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 16 வயது சிறுமியை பல நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலாஜியும், அவரது மனைவியும் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
புதுச்சேரி:
சுற்றுலா நகரமாக விளங்கும் புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை மற்றும் ஸ்பா என்ற பெயரில் விபசார தொழில் நடந்து வருகிறது.
இதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் ஆன்லைனில் புக்கிங் செய்து விபசாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுவை கோரிமேடு எல்லைக்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டுக்கு சில வாலிபர்கள் வந்து செல்வதுமாக இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 16 வயது சிறுமியுடன் ஒரு வாலிபர் தனிமையில் இருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூரை சேர்ந்த பாலாஜி, அவரது மனைவி உமா ஆகியோர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 16 வயது சிறுமியை பல நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலாஜியும், அவரது மனைவியும் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக பாலாஜியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலாஜி கொடுத்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள். விபசாரத்தில் ஈடுபடுத்திய சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
புதுவை நகரின் மத்தியில் அதிக குடியிருப்புகள் உள்ள இடத்தில் பல மாதங்களாக இந்த விபசார தொழில் நடந்து வருவதால் இதற்கு புதுவையில் உள்ள ஒரு சில அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.