செய்திகள் (Tamil News)
நீதிபதி அல்லி கண்பார்வை இழந்த ஜெயபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

விபத்தில் கண்பார்வை இழந்த திருப்பூர் தனியார் கம்பெனி மேலாளருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு

Published On 2018-09-08 06:52 GMT   |   Update On 2018-09-08 06:52 GMT
விபத்தில் கண்பார்வை இழந்த திருப்பூர் தனியார் கம்பெனி மேலாளர் ஜெயபிரகாஷ் பூபதிக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டனை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பூபதி (வயது 47). டையிங் கம்பெனி மேலாளர். இவரது மனைவி சுமதி (42).

கடந்த 2013 மார்ச் 10-ந்தேதி ஜெயபிரகாஷ் பூபதி தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் ரோடு மும்மூர்த்தி நகரில் சென்றார். போயம்பாளையத்தில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் பூபதி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது 2 கண்பார்வையும் பறிபோனது. விபத்து குறித்தான வழக்கு 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது. வாதி, பிரதிவாதி, சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதே கோர்ட்டில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் பார்வை இழந்த ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர், எதிர்தரப்பை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். அங்கு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் விபத்தில் பார்வை இழந்த ஜெயபிரகாஷ் பூபதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதனை ஏற்றுக்கொள்வதாக ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காசோலை தயார் செய்யப்பட்டது.

தயார் செய்யப்பட்ட நஷ்ட ஈடுக்கான ரூ.1 கோடி காசோலையை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதி மற்றும் அவரது குடும்பபத்தினரிடம் வழங்கினார். இதில் 2-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜியாவுதீன், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெகநாதன், முதன்மை நீதிமன்ற நீதிபதி அழகேசன் மற்றும் நீதிபதிகள் கவியரசு, நித்திய கலா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர். #tamilnews
Tags:    

Similar News